Tirsdag, 23 Februar 2010 22:00
Skrevet af Thisaigal
1948ல் இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து, அடக்குமுறைக்குள் வாழும் தமிழ் இனத்திற்கான ஒரு தீர்வை காண்பதற்காக, 1976ல் அனைத்து தமிழ் அரசியற்கட்சிகளும் முதல் முதலாக ஒன்று சேர்ந்தன. இந்த இணைவிற்கு முதல் முக்கிய காரணமாக இருந்தவர்கள் தமிழ் இளையோர்களே. தமிழ் அரசியல்வாதிகளால், தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வை காண்பதற்காக முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் சிங்கள அரசினால் நிராகரிக்கப்பட்டதால், தமிழ் இளையோர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தை தம் கையில் எடுத்தனர்.
30 வருடங்களாக அகிம்சை வழியில் தமிழ்மக்களினால் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டங்களிற்கு, சிங்கள ஆட்சியாளர்களும் சிங்கள காடையர்களும் வன்முறைகளாலும் கொலைகளாலுமே பதில் தந்தார்கள். சிங்கள அரசின் இவ்விதமான தமிழ்மக்களின் மேலான வன்முறை காரணமாக, தமிழ் இளையோர் ஆயுதத்தை கையில் எடுத்து அதன் வழியாக, தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வைக் காணவேண்டிய சூழலுக்கு உந்தப்பட்டார்கள். தமிழ் இளையோர் ஆயுதத்தை கையில் எடுத்ததால், அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், ஒன்றாகச்சேர்ந்து உடனடியாக ஒருமுடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
தமிழரசு கட்சியின் தலைமையிலே அனைத்துத் தமிழ் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்டதே வட்டுக்கோட்டை பிரகடனம். இந்த பிரகடனமானது, இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ் மக்கள்மேல் சிங்கள அரசினால் தொடுக்கப்பட்ட அடக்குமுறையையும், அந்த அடக்கு முறையிலிருந்து தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தை மீட்டுக்கொடுப்பதற்காக ஒரு தீர்வையும் விபரித்துள்ளது. அதாவது எம் இனத்தின் சுதந்திரத்திற்காக ஒரே தீர்வு இறைமையுள்ள தமிழீழத் தனியரசு என்பதை இப் பிரகடனம் உலகிற்கு பறை சாற்றியது.